வைகைநதியின் தந்தை கர்னல் திரு.பென்னிகுயிக்
"வைகைநதிக்கரையில்" ஏதாவது பெயர்க்காரணமுண்டா?கேட்டார் நண்பர் ராஜ்குமார்.
காரணம் சொல்லும்போதே,வைகையின் வரலாற்றையும்,வைகையை எங்களுக்குத்தந்தஎங்கள் குலதெய்வமாம் கர்னல் திரு.J.பென்னிகுயிக் (Col. J.Penny Cuick)அவர்களைப்பற்றியும் சொல்ல உத்தேசித்ததின் விளைவே,இப்பதிவு.
எனது ஊர் தேனிமாவட்டம்(முன்பு மதுரை) வீரபாண்டி.கேரளா நோக்கிச்செல்லும்சாலையில் தேனியிலிருந்து 7கி.மீ தொலைவில் வைகைநதிக்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்.அருள்மிகு கெளமாரி திருக்கோயிலால் அந்த சுற்றுவட்டாரத்தில் பிரபலமாக உள்ள கிராமம்.
சித்திரையில்,மதுரைத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய திருவிழா நடைபெறும்.எங்கள் ஊர்த்திருவிழாவின் சிறப்பை சொல்லமுயன்ற எல்லா இடங்களிலும் நான் தோற்றுத்தான் போயிருக்கிறேன்.(சரி சரி,விட்றா...என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது)
இப்போது,வைகைக்கு வருவோம்.
வைகையின் பிறப்பிடம் பெரியார் அணை.பெரியார் அணை அமைந்துள்ள தேக்கடி,கேரளாவில்தமிழக எல்லையிலிருந்து சுமார் 5கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.(ஆனால் அணையின் நிர்வாகம் தமிழகத்தின் கையில்).
இந்நதியால்,இன்று தமிழகத்தில் 70,000 ஏக்கர் பரப்பு விவசாயம் நடைபெறுகிறது.
(அணையின் மட்டம் 152 ஆக இருந்தபோது 2,17,000 ஏக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது,கேரள அரசானது அணை பழுதாகி விட்டதாகவும்,அணையின் முழு கொள்ளவான 152 அடி நீர் தேக்குவது ஆலப்புழா,கோட்டயம்,எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆபத்தானதாகும் என்கிறது.தற்போது 136அடி தான் நீர் அனுமதிக்கப்பட்டுள்ளது)
தேக்கடியிலிருந்து 3இராட்சத குழாய் மூலம் மின்நிலையம் வந்து,பின் சுருளி மற்றும் பல கிளைஆறுகள் சேர்ந்து,எங்கள் ஊரைக்கடந்து செல்லும் ஆற்றுக்குப்பெயர் ,பெரியாறு அல்லது முல்லையாறு.தேனிக்கும் ஆண்டிபட்டிக்கும் இடையிலுள்ள வைகை அணையை வந்தடையும் போது,இது வைகை என அழைக்கப்படுகிறது.இந்த எல்லைக்கு மேல்தான் நீர் பற்றாக்குறை ஆரம்பம்.ஒரு காலத்தில்,எங்களை வாழவைத்துச்செல்கிற பெரியாறு,வைகை அணை கடந்து,மதுரையை தாண்டி இராமநாதபுரம் வரை சென்று,கடலில் கலக்குமாம்.
இப்போதெல்லாம்,மதுரைக்குச் செல்லுமுன்னே வறண்டுபோகிறது.இதற்கு,காமராஜரும் ஒரு காரணம் என்கிறார்கள். தமிழக எல்லைக்குள் இருந்த அணையை( இடுக்கி மாவட்டத்தை) 1952ல் திருவாளர் காமராஜர் ஏதோ சில காரணங்களுக்காக கேரளாவிற்கு கொடுத்துவிட்டு,நாகர்கோயில் பகுதியைப்பெற்றுள்ளார்.இல்லாவிடில்,152 அடி வரை நம்மால் நீர் தேக்கமுடியும்.)
பெரியார் அணையானது,கி.பி.1885த்தில் ஆங்கிலேய அரசால் தொடங்கி கி.பி.1895த்தில் கர்னல் J.பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய என்ஜியரால் கட்டிமுடிக்கப்பட்டது.தேக்கடி காட்டுப்பகுதியில் அந்தப்பகுதியில் பெய்கிற மழைநீர்யாவும் தேங்குவதையறிந்த ஆங்கிலேய அரசுஅணையன்று கட்டத்திட்டமிட்டது.ஆனால்,அடர்ந்த காட்டைத்திருத்துகிற பணியில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அரசை பின்னடையச்செய்தது.உயிர்ச்சேதம் தொடர பணியை நிறுத்தியது அரசு.
தென்தமிழ்நாட்டுமக்கள் செய்த புண்ணியம்,கர்னல் பென்னிகுயிக் இத்திட்டத்தை விடமறுத்தார்.ஆனால் அரசு,நிதியை நிறுத்திக்கொண்டது.(எங்க கட்டுடி மாப்ள பார்ப்போம் அப்டினு).கர்னல் விடுவதாயில்லை.தன் சொந்த செலவில்,தன் சொத்துக்களையெல்லாம் விற்று,இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
அந்த மாமனிதன்,செய்த தியாகம்,இன்று தமிழகத்தின் ஒருபகுதி நிலப்பரப்பை செழிக்கவைத்து,பல்லாயிரம் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிற இந்த நதியை எங்களுக்கு தந்த அந்த மாமனிதனுக்கு,அவன் தயவால் உண்டு வளர்ந்த எங்கள் மூதாதைகளின் சார்பாயும்,என் தலைமுறை சார்பாயும்,என் சந்ததிகளின் சார்பாயும் அவன் குடும்பம் இருக்கும் திசைநோக்கி வணங்கி,அவனுக்கு பெருமைசேர்க்கும் நோக்கில் இந்தப் பதிவைச்சமர்ப்பிக்கிறேன்.
வீரமணி இளங்கோveeramanielango@hotmail.com
1.இப்போதும் எங்கள் கிராம பெரிசுகள்,திரு.பென்னிகுயிக்கை,அவரின் பெயரைச்சொல்லி நினைவுகூறுவதுண்டு.
2.திரு.பென்னிகுயிக்கின் சிலை,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணலாம்.
3.மதுரை கோரிப்பாளை அருகில்,ஏதோவொரு அரசு அலுவலகத்திற்கு,பென்னிகுயிக் வளாகம் எனப் பெயரிட்டுள்ளனர்.
4.சமீபத்தில்,திரு.பென்னிகுயிக்கின் பேரன் தன் தாத்தா கட்டிய
அணையைக்காண வந்திருந்தபோது ,மதுரை மாவட்ட ஆட்சியர் அவரை வரவேற்று கெளரவித்தார்.